மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் கோயில் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.
திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மந்தையம்மன் கோயிலில் புரட்டாசித் திருவிழா நடந்து வந்தது. இதில், அக்டோபர் 3-ஆம் தேதி ஒரு பிரிவைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி சுமந்து செல்லும்போது, மற்றொரு பிரிவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.இதனால், இரு பிரிவினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதில், கோயில் திருவிழா கொண்டாடக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு பிரிவினர் செவ்வாய்க்கிழமை இரவு முளைப்பாரி எடுக்க முற்பட்டனர். அதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீஸார் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, முளைப்பாரி எடுக்கக்கூடாது என்று கூறி, முளைப்பாரிகளை லாரியில் ஏற்றி கண்மாயில் கரைக்க எடுத்துச் சென்றனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.