திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் சுகாதாரம் பராமரிக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் ஜெயபிரகாஷ் (16) தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாள்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் சுகாதாரம் பராமரிக்கப்பட வில்லை என அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனஅவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து முருகன் என்பவர் கூறியதாவது: தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனி மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியில் சாக்கடைகள் பல நாள்களாக தேங்கியுள்ளது. மேலும் இப்பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மாணவர் உள்ளிட்ட பலருக்கு காய்ச்சல் வந்தவுடன் துப்புரவு பணி செய்கின்றனர் என்றார்.