அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த தந்தை சாலையில் அமர்ந்து புதன்கிழமை போராட்டம் நடத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூர் 60 அடி சாலை பகுதியில் வசித்து வருபவர் முகமது நஸ்ருதீன். இவரது மகன் அல்அமன் (12), 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். 3 நாள்களுக்கு முன்பு அல்அமனுக்கு காய்ச்சல் இருந்ததால், அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைக்கு தாமதம் ஏற்படுவதாகக் கூறி, புதன்கிழமை காலை அரசு மருத்துவமனை பிரதான வாயில் முன்பாக மகனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை போராட்டத்தை கைவிடச் செய்தனர்.