மனைவி மீது தாக்குதல்: தடுக்க முயன்ற கணவர் குத்திக் கொலை

மதுரையில் மனைவியைத் தாக்கியதை தடுக்க முயன்றபோது, மர்ம நபர் கத்தியால் குத்தியதில் கணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மதுரையில் மனைவியைத் தாக்கியதை தடுக்க முயன்றபோது, மர்ம நபர் கத்தியால் குத்தியதில் கணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
       மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (67). இவர், தனது மனைவி செந்தில்குமாரியுடன் (48) தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் திங்கள்கிழமை இரவு ஜெயபாலன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
 மனைவியின் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் செந்தில்குமாரியை தாக்கிக் கொண்டிருந்துள்ளார். உடனே, ஜெயபாலன் அந்த நபரை தடுத்துப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த நபர் ஜெயபாலன் மார்பில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.
      இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலனை, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயபாலனை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.   அதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயபாலனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரி அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     இது தொடர்பாக போலீஸார் கூறியது: கொலை செய்யப்பட்ட ஜெயபாலன் புதுச்சேரியில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இவருக்கு, இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு இரண்டு  பிள்ளைகள். ஜெயபாலன் இரண்டாவது மனைவி செந்தில்குமாரியுடன் வசித்து வந்துள்ளார். செந்தில்குமாரிக்கு குழந்தை இல்லை. மேலும்,  2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் மதுரைக்கு  வந்து வாடகைக்கு வீடு பிடித்து குடியிருந்துள்ளனர்.
     கடந்த திங்கள்கிழமை இரவு 25 வயது மதிக்கத்கக்க  இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஜெயபாலன் அவரிடம் கேட்டபோது, முகவரி மாறி வந்துவிட்டதாகக் கூறிச் சென்றுவிட்டாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதே நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார்.
அப்போது, செந்தில்குமாரி கதவைத் திறந்துள்ளார். அந்த நபர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் அவரைத் தடுத்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மனைவியின் சப்தம் கேட்டு வந்த ஜெயபாலன் அந்த நபரை பிடிக்க முயன்றதில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com