உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில், உசிலம்பட்டி வட்ட சட்டப் பணிக்குழு சார்பாக, கேலி வதை தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமில், மூத்த வழக்குரைஞர்கள் கணேசன், பொன்னுத்துரை, வீர பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட நீதித்துறை மற்றும் நடுவர் கா. விவேகானந்தன் பேசியதாவது: தமிழகத்தில் கேலி வதை தடுப்புச் சட்டம் 1996 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. பின்னர், நாடு முழுவதும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
மாணவர்கள் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, காவல் துறை ஆய்வாளர் ராமசந்திரன், மாணவர்களுக்கு சட்ட விதிகளை விளக்கினார். இதில், கல்லூரிச் செயலர் பி. பாண்டியன், வழக்குரைஞர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் எம். ராஜேந்திரன் வரவேற்றார். வழக்குரைஞர் ரமேஷ் நன்றி கூறினார்.