மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா சார்பில், டெங்கு விழிப்புணர்வு பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை, செல்லூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் புதன்கிழமை தொடக்கி வைத்தனர். எல்இடி திரையுடன் கூடிய இந்த வாகனத்தில், டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஆகியன எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இந்த வாகனம் செல்லும் வீதிகளில் வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட செல்லூர் 50 அடி சாலை, 60 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாகனப் பிரசாரம் நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.