ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தை சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தாற்காலிக, தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த சில நாள்களாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அண்ணாமாளிகையில் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களை ஆணையர் அனீஷ் சேகர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநகராட்சி சார்பில் முடிவெடுக்க முடியாத கோரிக்கைகளாக இருப்பதால் உடனடித் தீர்வு காணமுடியாது என மாநகராட்சி தரப்பில் பணியாளர்கள் சங்கத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 3 மாத ஊதியத்தை வழங்கவேண்டும். நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும். தீபாவளிக்கு முன்பணம் வழங்கவேண்டும் என கோஷமிட்டனர். மாலையில் தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.