வெளிநாட்டில் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாய் வியாழக்கிழமை மனு அளித்துள்ளார்.
மதுரையை அடுத்த சிலைமான் கோழிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கு. இவரது மகன் சக்தீஸ்வரன். பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் மூலமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கென சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், துபைக்கு சென்றவுடன் ஏற்கெனவே உறுதி அளித்தபடி வேலை வழங்காமல் கூலித் தொழிலாளர்களைப் போல கடுமையான வேலை கொடுக்கப்பட்டதாம். மேலும் சொந்த ஊருக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லையாம். இந்நிலையில் சக்தீஸ்வரனின் தாயார் ராக்கு, வெளிநாட்டில் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தார்.