மதுரையில் இணையதளம் வழியாக பொருள்கள் விற்பனை செய்யும் ஊழியர், நிறுவனத்துக்கு பணத்தைச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ஆலங்குளம் சாஸ்தா நகர் சமந்தா தெருவைச் சேர்ந்தவர் நேரு (29). இணையதளம் பொருள்கள் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வாடிக்கையாளர்களிடம் பொருள்களை கொடுத்து விட்டு பணம் வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த இவர், அண்மையில் பொருள்களுக்கான பணத்தை நிறுவனத்துக்கு அனுப்ப வில்லையாம்.
இதனால் நிறுவனத்தில் இருந்து பணத்தை கேட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சிஅலுவலகம் அருகே நினைவிழந்த நிலையில் அவர் கிடந்துள்ளார்.
அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேருவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நேருவின் மனைவி பிரியங்கா அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.