உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை பேசினார்.
உலக உடல் உறுப்பு தினத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவ மற்றும் செவிலிய மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை கருத்தரங்குக் கூடத்தில் உலக உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது.
விழாவுக்கு அரசு மருத்துவமனை முதல்வர்(பொறுப்பு) மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.
விழாவில் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசியது:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மூலம் பல்வேறு உடல்உறுப்பு மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 1015 பேர் மட்டுமே உடல்உறுப்பு தானம் செய்துள்ளனர்.
மக்களிடம் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த 1015 பேரில் நானும் ஒருவன். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி அரசு மருத்துவமனை முன்பாக நடைபெற்றது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா ராணி மல்லிகா, காவல் துணை ஆணையர் அருண் பால கோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நரசிம்ம வர்மன் மற்றும் துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.