சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை பள்ளி மாணவர் விகாஷ் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட்டில் நடந்த சர்வதேச அளவிலான 9 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 38 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரில் மதுரை நீச்சல் வீரர் விகாஷும் ஒருவராவார்.
மதுரை லீ சாட்லியர் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவரான விகாஷ் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் (15 வயதுக்கு உள்பட்டோர்) 28.16 விநாடிகளில் தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும் 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் தூரத்தை 55.28 விநாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கமும், அத்துடன், 4ஷ்400 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் முதலிடம் வகித்து தங்கப்பதக்கமும், மெட்ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
போட்டிகளில் பங்கேற்ற விகாஷ் வெள்ளிக்கிழமை மாலை மதுரை வந்தார். அவரை மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலர் என்.கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். லீ சாட்லியர் பள்ளியிலிருந்து சனிக்கிழமை காலை விகாஷ் ஊர்வலமாக ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என என்.கண்ணன் கூறினார்.