மதுரையில் கடந்த மே மாதம் விபத்தில் காயமடைந்து சிகிச்சையிலிருந்த தலைமைக் காவலர் சுந்தர் (50) புதன்கிழமை மாலை உயிரிழந்தார்.
மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெரு சுல்தான் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (50). இவர், கரிமேடு போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தார். கடந்த மே மாதம் 25 ஆம் தேதி, இவர் செல்லூர் வைகை ஆற்றோரம் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இதில், சுந்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால் புதன்கிழமை மாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கரிமேடு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.