மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த நோயாளியிடமிருந்து இருதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
இது தொடர்பாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் பீட்டர் சவரிராஜ் (53). அப்பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மகன் ஜான்சனிடம் உடல் உறுப்பு தானம் தொடர்பாக மருத்துவர்கள் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் சம்மதம் தெரிவித்தார். பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மருத்துவமனையின் மருத்துவர் குழுவினர் 5 மணி நேரம் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பீட்டர் சவரிராஜின் இருதயம், கல்லீரல், கண்கள் ஆகியன அகற்றப்பட்டன. இதில், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், இருதயம் சென்னை போர்ட்டிஸ் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
விபத்தில் மூளைச் சாவடைந்த பீட்டர் சவரிராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் மூலம், 6 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.