சசிகலா புஷ்பா எம்.பி., ராமசாமி திருமண விவகாரம்: சத்யப்பிரியாவை கைது செய்ய தில்லி போலீஸார் மதுரையில் முகாம்

சசிகலா புஷ்பா எம்.பி. திருமண விவகாரத்தில் தொடர்புடைய ராமசாமியின் மனைவி சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோரைக் கைது
சசிகலா புஷ்பா எம்.பி., ராமசாமி திருமண விவகாரம்: சத்யப்பிரியாவை கைது செய்ய தில்லி போலீஸார் மதுரையில் முகாம்

சசிகலா புஷ்பா எம்.பி. திருமண விவகாரத்தில் தொடர்புடைய ராமசாமியின் மனைவி சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்ய, புதுதில்லி போலீஸார் மதுரையில் முகாமிட்டுள்ளனர். சத்யப்பிரியா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புதுமாகாளிப்பட்டி சாலை ஆதிமூலம் பிள்ளை சந்தை சேர்ந்தவர் சத்யப்பிரியா (24). இவர், கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ஓரியண்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்று கூறிக்கொள்ளும் ராமசாமி தன்னுடைய கணவர் என்றும்,  நீதிபதி என்று ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்த பிறகு தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அதில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் மீது திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸார் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, சசிகலா புஷ்பா, ராமசாமி ஆகியோரின் திருமணத்துக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடந்து முடிந்தது.  
இந்நிலையில், சத்யப்பிரியா மீதும், அவரது சகோதரர் மணிகண்டன் மீதும் ராமசாமி புதுதில்லி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதில், தனது முதல் மனைவியின் மகளை, சத்யப்பிரியாவும், அவரது சகோதரர் மணிகண்டனும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின்பேரில், சத்யப்பிரியா,  மணிகண்டன் ஆகியோர் மீது, புதுதில்லி நார்த் அவென்யூ போலீஸார், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் மார்ச் 26-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்பேரில், சத்யப்பிரியா, மணிகண்டனை கைது செய்வதற்காக,  புதுதில்லி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜய்பால் தலைமையில் இரு பெண் காவலர்கள் உள்பட 5 போலீஸார் மதுரைக்கு வந்துள்ளனர்.
மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை சத்யப்பிரியாவின் வீட்டுக்குச் சென்றனர். 
ஆனால், அங்கு சத்யப்பிரியாவின் வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து அவரது வீட்டின் முன், புதுதில்லியில் நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை நோட்டீஸை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
புதுதில்லி போலீஸார் சத்யப்பிரியா வீட்டுக்குச் சென்றபோது, அப்பகுதியினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கீரைத்துறை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பின்னர், புதுதில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையத்துக்குச் சென்று சத்யப்பிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
சத்யப்பிரியா, அவரது சகோதரர் மணிகண்டனை கைது செய்யும் வரை புதுதில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com