மதுரையில் ரூ. 27 கோடியில் கட்டப்பட உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த 1916-இல் கட்டப்பட்டது. சில அரசுத் துறை அலுவலகங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வெளியே அமைந்துள்ளன. எனவே, அனைத்து அலுவலகங்களும் ஒருங்கே அமையும் வகையில் பெருந்திட்ட வளாகம்
கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செங்கற்களை வைத்து கட்டடப் பணியைத் தொடங்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.மணிகண்டன், வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், அன்வர்ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, பி.நீதிபதி, பெரியபுள்ளான் , வருவாய்த்துறை முதன்மை செயலர் அதுல்யமிஸ்ரா, மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் உள்ளிட்ட சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வழங்கினர்.
20 நிமிடங்களில் முடிந்த விழா: இந்த அரசு விழாவானது, தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தேசியகீதம் என எந்த மரபுப்படியான நிகழ்வுமின்றி 11.50 மணிக்குத் தொடங்கி 12.10 மணிக்குள் 20 நிமிடங்களில் நடந்து முடிந்தது.
இடம் பெறும் அலுவலகங்கள்
விழாவில், பெருந்திட்ட வளாகம் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அளித்த அறிக்கை விவரம்:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 19.28 ஏக்கர் பரப்புடையது. இதில் 4.43 ஏக்கரில் புதிய பெருந்திட்ட வளாகம் அமையவுள்ளது. தரைத்தளம் மற்றும் 3 மாடிகளுடன் அமைய உள்ள இந்த வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம் (விமானநிலைய விரிவாக்கம்-1), தனி வட்டாட்சியர் அலுவலகம் (விமான நிலைய விரிவாக்கம்-2), மாவட்ட தணிக்கைத் துறை, சார்-நிலைக் கருவூலங்கள், உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட கருவூலங்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள், இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு)அலுவலகம், தனி வட்டாட்சியர் (கேபிள் டி.வி.), தனித்துணை ஆட்சியர் (நில உச்சவரும்பு), தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), கிளை மேலாளர் (எல்காட்), தனி வட்டாட்சியர் (அகதிகள் முகாம்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), மாவட்ட மேலாளர் (தாட்கோ), தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்), ஆணையாளர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையம்) அலுவலகம், தனி வட்டாட்சியர் (தேர்தல்), மாவட்ட தகவலியல் மையம் (என்ஐகியூ), மண்டல கருவூல இயக்குநர் (கருவூலம்), தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகிய அலுவலகங்கள் அமையவுள்ளன என்றார்.