வைகை அணையின் நீர் மட்டம் 35 அடிக்கும் மேலாக உயர்ந்தால், மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீர் திறக்க பரிசீலிக்கப்படவுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு வைகை அணையின் நீர் மட்டமும், நீர் வரத்தும் அதிகமாகவே உள்ளது.
இந்தநிலையில், பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், அதற்கான நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும், வைகை அணை நீர் மட்டம் விரைவில் 35 அடிக்கும் மேலாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகை அணை நீர் மட்டம் 35 அடிக்கும் மேலாக உயரும்போது, மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்துக்கு அங்கிருந்து தண்ணீர் திறந்துவிடலாம் என, மதுரை மாநகராட்சி சார்பில் பொதுப்பணித் துறையினரிடம் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட, மதுரை நகரின் குடிநீர்
தேவைக்கு வைகை அணையில் கூடுதல் தண்ணீர் இருப்பதால், சித்திரைத் திருவிழாவுக்கு தண்ணீர் திறப்பதில் பாதிப்பு ஏற்படாது என்றும், மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, வைகை அணை நீர் மட்டம் 35 அடிக்கும் மேலாக உயர்வதற்கு, பெரியாறு அணைக்கு நீர்வரத்து இருக்குமானால், சித்திரைத் திருவிழாவுக்கு கட்டாயம் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர்.