மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சோழவந்தான் அருகே உள்ள கீழநாச்சிகுளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மனம் (எ) அஜித்குமார் (14). சமயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி காடுப்பட்டியில் உள்ள முகமது இப்ராஹிம் என்பவரின் தோட்டக்கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை அஜித்குமார், நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, கிணற்றில் மேலிருந்து குதித்தபோது படிக்கட்டில் விழுந்து அடிபட்டு கிணற்றில் மூழ்கினார்.
இதுகுறித்த தகவலின்பேரில், சோழவந்தான் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அஜித்குமாரை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.