திருமங்கலத்தில் பூங்காவில் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுட்டனர்.
திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா, கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்தது. இதனால், பூங்காவுக்கு சிறுவர்கள், முதியோர் வருகை குறைந்தது. இதற்கிடையே இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதற்கு பதிலாக நகராட்சி நிர்வாகத்தினர் பூங்காவில் கடந்த சில நாள்களாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை பூங்கா முன், தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு குப்பை கொட்ட வந்த நகராட்சி துப்புரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்களிடம் பூங்காவில் குப்பை கொட்டுவதால் இப்பகுதியில் துர்நாற்றமும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இனி அங்கு குப்பைகள் கொட்டப்படமாட்டாது என நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.