மேலூர் அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்த தம்பதியின் கவனத்தை திசை திருப்பி 18 பவுன் நகையை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு கடந்த 12-ஆம் தேதி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், திருப்பத்தூரைச் சேர்ந்த சர்க்கரைபீர்முகமது, அவரது மனைவி ரிஸ்வானபேகம் ஆகியோர் 18 பவுன் நகைப் பையுடன் பயணம் செய்தனர். மேலூரை அடுத்த கீழவளவு அருகே பேருந்து வந்த போது, இவர்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், சர்க்கரை பீர்முகமது தம்பதியிடம் பேச்சுகொடுத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகை பையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறியாத அத்தம்பதியினர் பேருந்திலிருந்து இறங்கி சென்றுவிட்டனர். இந்நிலையில், தங்கள் நகைப் பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அவர்கள் கீழவளவு போலீஸில் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.