மதுரையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கூடல்நகர் சாந்தி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் நெடுஞ்செழியன். கட்டட ஒப்பந்ததாரரான இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினருடன் ஏப்ரல் 16-ஆம் தேதி திருப்பதிக்கு சென்றுவிட்டார். வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கிரில் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரதான கதவும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக நெடுஞ்செழியன் அளித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்திருந்த கைரேகளை பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.