அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவுக்கு, பதில் அளிக்குமாறு தமிழக சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த முகமதுயூனுஸ் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 4ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடைவிதிக்கவேண்டும். மேலும் இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்கவேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, தமிழக சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வெள்ளிக்கிழமைக்கு (டிச. 7) வழக்கை ஒத்திவைத்தனர்.