மதுரை அவனியாபுரத்தை அடுத்த முத்துப்பட்டியில் அரசு மதுபானக்கடையை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முத்துப்பட்டி சாலை மாநகராட்சி காலனி பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இங்கு செல்லம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா(43) மேற்பார்வையாளராகவும், மதுரை கொன்னவாயன் சாலைப் பகுதியைச் சேர்ந்த அய்யல்ராஜ் (45) உதவியாளராகவும் பணிபுரிகின்றனர். இவர்கள் சனிக்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு சென்று விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் அவனியாபுரம் போலீஸார் ரோந்து சென்ற போது, மதுபானக்கடை உடைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கடையிலிருந்து உயர் ரக மதுபானங்கள் 36 பெட்டிகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதே கடையில் கடந்த ஜூலை மாதம் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் காமிரா திருடப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த மாதம் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.