நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து மதுரை கீழமாசி வீதியில் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் திடீரென கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் பெரும்பாலான முக்கிய வீதிகளின் நடை பாதைகள் அனைத்தும் அந்தந்தப் பகுதி கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆவணி மூல வீதிகள், மாசி மற்றும் வெளி வீதிகளில் மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைமேடைகள் அனைத்தம் கடைகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பொருள்கள் வைக்கப்பட்டும் வருகின்றன.
மதுரையானது பொலிவுறு நகர்த்திட்டத்தில் தேர்வாகியிருப்பதால், மாசி வீதிகள் உள்ளிட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றிய பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரையை ஆய்வு செய்தவற்காக சிறப்புக் குழுவினரும் டாக்டர் பிஜூ தலைமையில் மதுரை வந்துள்ளனர்.
இந்த சிறப்புக்குழு மற்றும் ஆணையர் ஆய்வைத் தொடர்ந்து மாசி வீதிகளில் மக்கள் நடை பாதைகளில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சியைக் கண்டித்து கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு சந்திப்பில் ஏராளமானோர் திடீரென கூடி போராட்டம் நடத்தினர்.
அப்பகுதி கடைகளையும் அடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த
போக்குவரத்து போலீஸார் விரைந்து வந்து வியாபாரிகளை சமரசம் செய்தனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பொருள்களை எடுத்துச்செல்வதை தாற்காலிகமாக நிறுத்தவும் போலீஸார் கூறினர்.
இதையடுத்து வணிகர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கடைகளைத் திறந்தனர்.
ஆணையர் ஆய்வு: கீழமாரட் வீதியில் உள்ள வெங்காய சந்தையை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திடீரென செவ்வாய்க்கிழமை காலை ஆய்வு செய்தார். அப்போது பல கடைகளில் சாலையோரம் வெங்காய மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூட்டைகளை கடைகளுக்குள் வைக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்யவும் வியாபாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வழியின்றி வெங்காய மூட்டைகள் வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.