மாவட்ட அளவில் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாரட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்ட பளுதூக்கும் சங்கம் சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற மாவட்ட அளவிலான 14 ஆவது ஆண்டு இளையோர் மற்றும் சிறுமிகளுக்கான பளுதூக்கும் போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி மாணவர்கள் 7 பதக்கங்களை பெற்றனர்.
மாணவிகளுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி சித்ரா முதல் இடத்தையும், 58 கிலோ எடைப் பிரிவில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி மு. ஐஸ்வர்யா முதல் இடத்தையும் பெற்று பதக்கங்களை வென்றனர்.
இதேபோல மாணவர்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் சு.முத்துப்பாண்டி இரண்டாம் இடத்தையும், 62 கிலோ எடைப் பிரிவில் யு.மார்க்ஸ் லெனின் முதல் இடத்தை யும், 69 கிலோ எடைப் பிரிவில் மு.சோனைமுத்து முதல் இடத்தையும், நவீன் சக்கரவர்த்தி இரண்டாம் இடத்தையும், 77 கிலோ எடைப் பிரிவில் மு. காளிமுத்து முதல் இடத்தையும் பெற்று சாதனைப்படைத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி விளையாட்டுத்துறை சார்பாக திங்கள் கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு.கண்ணன் தலைமை வகித்து மாணவ, மாணவியரைப் பாராட்டி பரிசளித்தார். நிகழ்ச்சியில் உடற்பயிற்சி இயக்குநர் யுவராஜ் வரவேற்றார். துணை முதல்வர் கிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இயற்பியல் துறை பேராசிரியர் சர்வேஸ்வரன் நன்றி கூறினார்.