மாநகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 20 பேர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 20 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் பாரதியார் வணிக வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகிறோம். இதுவரை ரூ.10 ஆயிரத்து 565 வாடகை செலுத்தி வந்தோம்.
இந்நிலையில் இனிமேல் ரூ.13 ஆயிரத்து 358 வாடகையாகச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறினால் கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்களிடம் எந்தக் கருத்தையும் மாநகராட்சி நிர்வாகம் கேட்கவில்லை.
2007-இல் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த அரசாணை எண்.92-இன் படி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் மதிப்பீடு, நிலத்தின் தற்போதைய மதிப்பு, கட்டட மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாடகை உயர்த்தப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகளை மாநகராட்சி பின்பற்றவில்லை. எனவே வாடகையை உயர்த்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கடைகளின் வாடகை மற்றும் வரிப்பணத்தில் இருந்துதான் மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, தீர்ப்புக்காக பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.