மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சட்ட விரோதமாக ரூ. 6 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் வைத்திருந்த இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் இலங்கை விமானத்தில் செல்ல இருந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த சலீம் (50), தஞ்சாவூரைச் சேர்ந்த சதக் அப்துல்லா(50) ஆகிய இருவரின் பெட்டிகளுக்குள் சவூதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர் ஆகிய வெளிநாடுகளின் பணம் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இருவரும் அடிக்கடி வெளி நாட்டிற்கு சென்றுவரும் குருவி எனப்படும் கடத்தல் நபர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.