ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு
ரயில்வே காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல் துறையினர் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ரயில்வே பணிகளைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் காலியாக உள்ள 715 பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிய அமர்த்துவதைக் கைவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அச்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்.
இதன்படி, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.செந்தில் தலைமையில் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட செயலர் பி.கோபிநாத் உள்ளிட்ட பலர் மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றனர்.
அப்பகுதியில் தடுப்புக்கம்பிகளை வைத்து போலீஸார் தடை ஏற்படுத்தியிருந்தனர். இருப்பினும் சங்கத்தினர்
அவற்றை தள்ளிவிட்டு ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்தபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலர் கீழே தடுமாறி விழுந்தனர். பின்னர் ரயில் மறியலுக்கு முயன்ற 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.