மேலூர் - சிவகங்கை சாலையில் தினசரி சந்தைக்குச் செல்லும் வழியிலுள்ள ஆக்கிரமிப்பு கோயில் கட்டடத்தை இடித்து அகற்றும் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
தினசரி சந்தைக்குச் செல்லும் வழியில் சங்கிலிக்கருப்பர் கோயில் கூரைக் கொட்டகையில் இருந்தது. அக்கோயிலைச் சுற்றிலும் சிலர் காய்கறிக் கடைகள் வைத்துள்ளனர். இந்நிலையில், சிலர் கோயிலுக்கென சிறிய கட்டடத்தைக் கட்டத்தொடங்கினர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கட்டுமானப்பணி முடிவடையாத நிலையில், பொன்னன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரித்த மதுரைக் கிளை, ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்ற கடந்த அக்டோபர் 17-இல் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. அப்போது பல்வேறு இந்து அமைப்பினர் கோயிலை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, கட்டடத்தை இடித்து அகற்றும் பணியை மேலூர் நகராட்சி தாற்காலிகமாக நிறுத்திவைத்தது.