மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் புதன்கிழமை அலைமோதியது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு முதல் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. விடிய விடிய நடைபெற்ற பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், விரதமிருந்து பூஜைகளையும் நடத்தினர்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும், குலதெய்வ கோயில்களிலும் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றன. பூஜைப்பெட்டிகள் வீதி உலா பெரும்பாலான கிராமக்கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு குலதெய்வ வழிபாடு செய்தனர்.
புதன்கிழமை காலையில் சிவராத்திரியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், செல்லூர் திருவாப்புடையார், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் மற்றும் மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரையிலிருந்து ஏராளமானோர் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று குலதெய்வ வழிபாட்டையும் நடத்தினர். இதனால், மதுரையில் செவ்வாய், புதன்கிழமைகளில் வாடகை வாகனங்களின் வாடகை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.