மேலூர் நகராட்சிக்குச் சொந்தமான தினசரி காய்கறிச் சந்தையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.1 கோடிக்கு ஏலமிடப்பட்டது.
மேலூர் நகராட்சிக்குச் சொந்தமான தினசரி காய்கறிச் சந்தை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த காய்கறிச் சந்தைக்கான சுங்கக் கட்டண வசூல் ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ரூ.46 லட்சத்து 16 ஆயிரத்துக்கு ஏலம் போயிருந்தது. இந்த ஆண்டுக்கான ஏலத்தில் கடும்போட்டி நிலவியது. இந்நிலையில், ரூ.1 கோடியே 16 ஆயிரம் என ஏலத்தொகை முடிவானது.
பாஜகவினர் வாக்குவாதம்: தினசரி காய்கறிச் சந்தைக்கான ஏலம் துவங்கவிருந்த நிலையில், பாஜக மேலூர் கிளையைச் சேர்ந்தவர்கள், தினசரி காய்கறிச் சந்தை வளாகம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
பலர் காய்கறிக் கடைகளை நடைபாதைகளில் வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கடைகளை புதிதாக கட்டித்தரவேண்டும் என வலியுறுத்தினர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர்.