: மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனம் சார்பில் நாள்தோறும் மதுரையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் மதுரையில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் சுமார் 130-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இரவு 8 மணி வரையும் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை புறப்படும் என விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் பிற்பகல் முதல் இரவு வரை விமான நிலையத்தில் காத்திருந்து அவதியுற்றனர். மேலும் இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல இருந்தவர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.