அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.66 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழைய சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி தீபிகா (29). கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். அப்போது முத்துவீரன் என்பவர் தான் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருப்பதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், ரூ. 2 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய தீபிகா ரூ. 1.66 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், முத்துவீரன் போலி நியமன ஆணை வழங்கியுள்ளார். இதுகுறித்து தீபிகா அளித்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துவீரனைத் தேடி வருகின்றனர்.