மதுரையில் அடுத்தடுத்து மூன்று பேரிடம் நகை, பணம் மற்றும் செல்லிடப்பேசிகளைப் பறித்துச் சென்ற நபர்கள் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பெரோஸ்கான்(39). எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர் கே.கே. நகரில் உள்ள நண்பரின் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்று வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
புதூர் சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் இவரது வாகனத்தில் மோதினர். பின்னர் கீழே விழுந்த பெரோஸ்கானிடம் இருந்த நகை, மோதிரம், செல்லிடப்பேசி மற்றும் ரூ. 35 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் வாசு (62). இனிப்பு பலகாரங்கள் மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இவர் வெளியூர் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த மூவர் தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி வாசுவிடம் இருந்த ஏடிஎம் அட்டை, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (62). இவர் வெள்ளிக்கிழமை மாலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் குருமூர்த்தியிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் பணம், தங்கச் சங்கிலி, ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.