தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, அதிமுக அம்மா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த வைரவன் தாக்கல் செய்த மனு: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தேவர் திடல் பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் ஜனவரி 21 ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரி, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், திருமங்கலம் சரக துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் மனு அளித்தேன்.
இந்த மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, ஜனவரி 16-ஆம் தேதி திருமங்கலம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தபோது, பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
எனவே, பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.