திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் கொண்டாடப்படும் விழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவானது வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து காலை 10.05 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி தினமும் சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலை அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஜனவரி 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தை கார்த்திகை தினத்தன்று காலை 10 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சுவாமி, தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதியுலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.35 முதல் 11 மணிக்குள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் எம். விஜயராகவன், மன்னர் கல்லூரி உபதலைவர் எஸ். ராஜ கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ப. கவிதா பிரியதர்ஷினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.