திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் கடந்த சில நாள்களுக்கு முன் தமிழக முதல்வர் திறந்துவைத்த கல்வெட்டில் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், அமைச்சர்களின் பெயர் பொறித்த கல்வெட்டை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தோப்பூர் நான்கு வழிச்சாலைப் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கான வெற்றி விழா என முப்பெரும் விழா கடந்த நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். இவ்விழாவில் துணை முதல்வர் பங்கேற்கவில்லை. மேலும் பிரதானமாக இருந்த கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்காமல், கொடி மரத்தின் பக்கவாட்டுப் பகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், அமைச்சர்களுக்கும் தனியாக கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை கொடிமரத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பெயர் பொறித்த கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படமும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. கொடிமரத்தைச் சுற்றிலும் மதுபாட்டில்களும் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.