திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக, மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை திமுகவினர் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாரஇதழ் செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி (திமுக) மீது திருப்பரங்குன்றம் போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையரைச் சந்திக்க 15-க்கும் மேற்பட்ட கார்களில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை குவிந்தனர். அப்போது காவல் ஆணையரின் வாகனமும் அலுவலகத்துக்குள் நுழைந்தது. இதனால் போலீஸார், திமுகவினரைத் தடுத்து நிறுத்தி நிர்வாகிகள் 5 பேர் மட்டும் செல்ல அறிவுறுத்தினர். அப்போது போலீஸாருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலர் மு.மணிமாறன் உள்ளிட்ட 7 பேர் மட்டும் ஆணையரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து, சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மீது பொய்யான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.