மதுரையில் கணவரால் கைவிடப்பட்ட பெண் வீட்டில் 15 பவுன் நகைகளை திருடிச்சென்றதாக உறவினர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அய்யர்பங்களா எழில்நகரைச் சேர்ந்தவர் சுதா(31). கணவரால் கைவிடப்பட்ட இவர் கண்ணனேந்தல் பகுதியில் தையல்கடை நடத்தி வருகிறார். தனியாக வசித்து வந்த சுதாவுக்கு அவரது உறவினரான அண்ணாநகரைச் சேர்ந்த சுப்ரமணியன் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுதாவை, சுப்ரமணியன் தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அக்டோபர் 5-ஆம் தேதி சுப்ரமணியன் தாக்கியதால் சுதார் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இதை பயன்படுத்திய சுப்ரமணியன் சுதாவின் வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டாராம். இதுதொடர்பாக சுதா வியாழக்கிழமை அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் சுப்ரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.