மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 4 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.
திண்டுக்கல் ரயில் நிலையப்பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(32). இவர் தனது மனைவியுடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்றபோது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பாண்டியராஜனை வழிமறித்து கணவர், மனைவி இருவரையும் தாக்கி 4 பவுன் சங்கிலி, ரூ.8 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பாக பாண்டியராஜன் அளித்தப் புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.