அரசின் சாதனைகளை விளக்கி பெண்கள் மட்டும் பங்கேற்கும் சைக்கிள் பேரணி திருப்பரங்குன்றம் தொகுதியில் அக்.24-இல் நடைபெற உள்ளது என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையை அடுத்த சிலைமானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியின் பூத் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியது:
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரமாக, ஜெயலலிதா பேரவையின் சார்பில் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த பேரணி முடிவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு மற்ற மாவட்டங்களில் இப் பேரணி நடைபெறும்.
ஏற்கெனவே நடந்த சைக்கிள் பேரணியில் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர். தற்போது 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி திருப்பரங்குன்றம் தொகுதியில் அக்.24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பேரணியில் பங்கேற்கும் பெண்களுக்கான பயிற்சி விரகனூர் சுற்றுச்சாலை அருகே உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் சனிக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது. அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பேரணியில் பங்கேற்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
அதிமுக அமைப்புச் செயலர் ம.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பி.பெரியபுள்ளான், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.