மதுரையில் இரு தபால் நிலையங்களில் சர்வதேச தபால் சேவைகளுக்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மதுரை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் என்.ஸ்ரீஹர்ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: அஞ்சல்துறை சார்பில் பல்வேறு நாடுகளுக்கு பதிவுத் தபால், விரைவுத் தபால் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மதுரையில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம், காந்திநகர் துணை தபால் நிலையம் ஆகியவற்றில் இந்த சேவைக்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு வெளி நாடுகளுக்குத் தபால் அனுப்புவதற்கு முன்பு பொருள்களைப் பார்சல் செய்வதற்கான 'பேக் போஸ்ட்' மையங்கள் (pack post centre) செயல்பட்டு வருகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வசதிக்காக மேற்கூறிய இரண்டு தபால் நிலையங்களிலும் பார்சல் பதிவு மையங்கள் இயங்குகின்றன. 2 கிலோ எடையுள்ள கடிதங்களை சர்வதேசப் பதிவுத் தபால் மூலமாகவும், 20 கிலோ வரை எடையுள்ள பார்சல்களை சர்வதேச பார்சல் மூலமாகவும், 35 கிலோ வரை எடையுள்ள பார்சல்களை சர்வதேச விரைவு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
தபால் தடமறிதல் வசதி: சர்வதேச பதிவுத் தபால் சேவையில் தடமறிதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் 2 கிலோ வரை எடையுள்ள கடிதங்களை பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 ஆசிய, பசிபிக் நாடுகளுக்கு அனுப்பலாம். தபாலில் அனுப்ப தடை செய்யப்பட்ட பொருள்கள், கட்டணம், தபால் தடமறிதல் உள்ளிட்ட விபரங்களை www.indiapost.org என்ற இணையதளம் மூலம தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் மேற்கூறிய இரு அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.