வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அக்.24 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் எச்சரித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர், கிழக்கு ஒன்றியம் காதகிணறு, மேலூர் ஒன்றியம் தெற்குதெரு ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் நடராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த ஆட்சியர், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் கொசுப் புழு உற்பத்தி உள்ளதா என ஆய்வு செய்தார். காதகிணறு எல்.கே.டி. நகரில் சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். தொடர்ந்து நரசிங்கம், கொடிக்குளம் கிராமங்களில் ஆய்வு செய்து, சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.
தெற்குதெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரிடம் பேசிய ஆட்சியர், பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலூர் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தார்.
"வீடுகள், சுற்றுப்புறங்கள், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அக்.24 முதல் அபராதம் விதிக்கப்படும்' என்று ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.