மதுரையில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவரின் தந்தை விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை பாக்கியநாதபுரம் அனுமான் நகரைச் சேர்ந்த பெரியபாண்டி மகன் ஹரிராஜ்(27). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் இடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிராஜின் தந்தை பெரிய பாண்டி குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பவுன்ராஜின் மகன்கள் மாயாண்டி, சசி ஆகியோர் கூடுதல் தொகை தருமாறு பெரியபாண்டி, அவரது மகன் ஹரிராஜிடம் கேட்டு வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மாயாண்டி, சசி உள்ளிட்ட சிலர் ஹரிராஜை ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்தனர். ஹரிராஜ் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கொலையாளிகள் மாயாண்டி, சசி வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் மாயாண்டி, சசி ஆகியோரின் தந்தை பவுன்ராஜ், தனது மனைவியுடன் திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூருக்கு சென்று தங்கியுள்ளார். அங்கும் அவருக்கு மிரட்டல் வந்ததால் மனமுடைந்த பவுன்ராஜ் திங்கள்கிழமை மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுன்ராஜ் செவ்வாய்க்கிழமை இறந்தார். சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.