தேனியைச் சேர்ந்த கால்நடை மருத்துவ உதவியாளர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புல்லக்காப்பட்டி டிவி நகரைச் சேர்ந்தவர் பெருமாள்(35). கால்நடை உதவியாளராக பணிபுரிந்து வரும் பெருமாள் சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.தேனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையாததால் மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெருமாளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, பெருமாளை மதுரைஅரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர். இதையடுத்து பெருமாளின் குடும்பத்தினர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரத்த பரிசோதனை முடிவுக்கு பின்னரே பெருமாளுக்கு சாதாரண காய்ச்சலா அல்லது பன்றிக்காய்ச்சலா என்பது தெரிய வரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.