மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் பெண்களுக்கு ஆபத்து கால செல்லிடப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகரக் காவல்துறை செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக காவல்துறை உதவியை உடனடியாக பெறுவதற்கு பயன்படும் வகையில் பிரத்யேக எஸ்ஓஎஸ் செயலியை தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மதுரை மாநகரக் காவல்துறையில் எஸ்ஓஎஸ் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிக்குச்செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், வீட்டில் உள்ள பெண்கள் ஆகியோர் எஸ்ஓஎஸ் செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு ஆபத்து மற்றும் இக்கட்டான நேரங்களில் எஸ்ஓஎஸ் பொத்தானை அழுத்தினால் அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இந்த செயலியை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். எனவே பெண்கள் எஸ்ஓஎஸ் செயலியை பயன்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.