திருப்பரங்குன்றத்தில் சரவணப்பொய்கை மற்றும் லெட்சுமி தீர்த்தக்குளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ள சரவணப் பொய்கையில் இருந்துதான் சுவாமியின் வேலுக்கு அபிஷேகம் செய்ய தினமும் காலையில் புனிதநீர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கந்தசஷ்டி திருவிழாவின் போது தீர்த்த உற்சவத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் எழுந்தருளுவார்.
இதேபோல வைகாசி விசாகத்தின் போது பால்குடம் எடுத்துவரும் பக்தர்கள் சரவணப் பொய்கையில் புனித நீராடிச் செல்வது வழக்கம். இவ்வளவு சிறப்பு பெற்ற சரவணப் பொய்கை கடந்த சில வாரங்களாக மிகவும் மாசுபடிந்து கிடக்கிறது.
இதனை தூய்மைப்படுத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேபோல கோயில் வளாகத்தில் லெட்சுமி தீர்த்தம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்த காரணத்தால் குளத்தில் தண்ணீரின்றி வரண்டு காணப்பட்டது.
தற்போது கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக கோயில் திருக்குளத்தில் தண்ணீர் வரத்து வரத்துவங்கியுள்ளது. இந்நிலையில் குளத்தில் உள்ள தண்ணீர் பாசி படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது. எனவே லெட்சுமி தீர்த்தக் குளத்தையும் சுத்தப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியது: சரவணப்பொய்கையில் பொதுமக்கள் தினமும் நூற்றுக்கனக்கானோர் சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவைகள் கொண்டு குளிப்பதாலும், துணிகள் துவைப்பதாலும் அசுத்தமாகி வருகிறது.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்தாலும் அவர்கள் தொடர்ந்து ரசாயன கலவைகள் கொண்டு துணி துவைப்பதால் தண்ணீர் மாசடைகிறது. தற்போது கோயில் பணியாளர்களைக் கொண்டு குளத்தை சுத்தப்படுத்தி வருகிறோம்.
இதேபோல லெட்சுமி தீர்த்தத்தில் இந்த ஆண்டு தண்ணீர் நிரம்ப துவங்கியுள்ளது. அதில் உள்ள பாசிகள் செவ்வாய்கிழமை அகற்றப்பட உள்ளது. மேலும் இயற்கையாக சுத்தப்படுத்தும் விதத்தில் கோயில் லெட்சுமி திருக்குளத்தில் முதற்கட்டமாக 3 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இதேபோல சரவணப் பொய்கையிலும் மீன்கள் விடப்பட உள்ளது என்றனர்.