விடுதலைப் போராட்ட வீரர் குயிலி சிலைக்கு அஞ்சலி செலுத்த தமிழ்ப் புலிகள் கட்சியினருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில துணைச் செயலர் மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த எஸ்.ஆதிவீரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
விடுதலைப் போரின்போது ஆங்கிலேயர்களிடமிருந்து சிவகங்கையை மீட்பதற்காகப் போராடி உயிர்நீத்தவர் விடுதலைப் போராட்ட வீரர் குயிலி. சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் மணி மண்டப வளாகத்தில் குயிலியின் சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
குயிலியின் நினைவுநாள் ஒவ்வொரு வருடமும் சிவகங்கையில் அக்டோபர் 19 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப் புலிகள் கட்சியினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
இது சட்டவிரோதமானது. எனவே சாதி, மத வேறுபாடின்றி சிவகங்கை வேலுநாச்சியார் மணி மண்டப வளாகத்தில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் குயிலி சிலைக்கு அஞ்சலி செலுத்த தமிழ்ப் புலிகள் கட்சியினருக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், விடுதலைப் போராட்ட வீரர் குயிலி சிலைக்கு தமிழ்ப் புலிகள் கட்சியினர் அஞ்சலி செலுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மேலும், அஞ்சலி செலுத்துவதற்கு நிபந்தனைகள் இருந்தால் இரண்டு நாள்களுக்குள் தமிழ்ப் புலிகள் கட்சியினருக்கு தெரிவிக்க சிவகங்கை டிஎஸ்பிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.