காய்ச்சலுக்கு சுய மருத்துவம் உயிரிழப்பை ஏற்படுத்தும்: மருத்துவர்கள்  எச்சரிக்கை

காய்ச்சலுக்கு சுய மருத்துவம் உயிரிழப்பை ஏற்படுத்தும்: மருத்துவர்கள்  எச்சரிக்கை

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து வாங்கி சாப்பிடுவது, அனுமதியின்றி பரிசோதனைக் கூடங்களில் சிகிச்சை பெறுவது போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படும்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து வாங்கி சாப்பிடுவது, அனுமதியின்றி பரிசோதனைக் கூடங்களில் சிகிச்சை பெறுவது போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படும் என்று அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திங்கள்கிழமை கூறியது: 
 பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது. இக்கிருமிகள் அடிக்கடி தங்களது வடிவத்தை மாற்றிக்கொள்ளக் கூடியவை. இதனால் பன்றிக் காய்ச்சலுக்கு தகுந்த மருந்துகள் கண்டுபிடிப்பது சவாலானது. மேலும் "எச் 1 என் 1' என்று அழைக்கப்படும் பன்றிக்காய்ச்சல் கிருமிகள் தற்போது "எச் 3 என் 2' என்ற புதிய வடிவத்தை எடுத்துள்ளன. 
ஆனால் மதுரையில் புதிய வடிவத்திலான பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. இதில் வருமுன் காக்கும் நடவடிக்கைகளே பன்றிக்காய்ச்சலை தடுத்து நிறுத்தும். சளி மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் கைகுலுக்குவதை தவிர்ப்பது, தும்மல், இருமல் போன்றவற்றின்போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்வது, அருகில் உள்ளவர் இருமினால் கூட நம் முகத்தை மூடிக்கொள்வது, மருத்துவமனைகளில் மாஸ்க் அணிந்துகொள்வது, வெளியில் சென்று வந்தவுடன் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தமுடியும்.
சாதாரண காய்ச்சல் மட்டுமின்றி பன்றிக் காய்ச்சலையும் கூட தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் இறுதிக்கட்டத்தில் தான்  வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு இறந்து விடுகின்றனர். 
மேலும் 103 டிகிரிக்கும் மேற்பட்ட அளவிலான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தும்மல், சளி, உடல் வலி, மூச்சுத்திணறல், மூட்டு மற்றும் இணைப்பு எலும்புகளில் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறியாக கருதப்படுகிறது. 
இந்த பாதிப்பு உள்ளவர்கள் மருந்துக்கடைகளுக்கு சென்று தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது.
மேலும் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கும் தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்களுக்கு சென்று பரிசோதனை செய்யக்கூடாது. தற்போது மருத்துவ பரிசோதனைக்கூடங்கள் புற்றீசலாக பெருகி விட்டன. இவற்றுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. மேலும் இப்பரிசோதனைக் கூடங்களில் உள்ள கருவிகளும் தரமானவை கிடையாது. எனவே தனியார் மருத்துவப் பரிசோதனைகூடங்களில் பெறப்படும் முடிவுகள் உண்மையாக இருப்பது கிடையாது. 
மேலும் பல தனியார் மருத்துவப் பரிசோதனைக்கூடங்களில் மருத்துவர்களின் பெயரை போலியாக போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற தவறான சிகிச்சைகளால் தான் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களை கண்டறிய நுண்ணுயிரியல் பரிசோதனைக் கூடம் உள்ளது. இங்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் உள்ளன.
பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு பிசிஆர்(பாலிமரைஸ்டு சேஞ்ச் ஆக்சன்)  பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனைகளுக்கு வெளியில் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாகவே மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பன்றிக்காய்ச்சல்  மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. முதல்வகை லேசான பாதிப்பு, இரண்டாவது வகை தீவிர பாதிப்பு, மூன்றாவது வகை அபாய கட்டம். இவற்றின் அடிப்படையில் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளை தனி வார்டில் வைத்து டாமி புளூ உள்ளிட்ட மருந்துகள் அளிக்கப்படும். 
மேலும் பன்றிக்காய்ச்சலுக்கு டிரை வேலண்ட் என்ற தடுப்பூசியும் போடப்படும். எனவே பன்றிக்காய்ச்சலுக்கு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெறுவது உயிரிழப்பை தவிர்க்கும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com