இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்ல பேருந்து வசதி செய்து தரக்கோரி அரசு பேருந்துகளை திருமங்கலம் அருகே கிராம மக்கள் செவ்வாய்கிழமை சிறைபிடித்தனர்.
திருமங்கலத்தை அடுத்த சுங்குராம்பட்டி கிராமத்தினர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்ல செவ்வாய்கிழமை முடிவு செய்திருந்தனர். இதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் பேருந்து பணிமனை மேலாளரிடம் கிராமத்திலிருந்து பரமக்குடி செல்ல தனிப் பேருந்து வசதி செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனராம். மேலாளரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை பேருந்து வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் செல்லும் இரு பேருந்துகளை சுங்குராம்பட்டி விலக்கு அருகே சிறைபிடித்தனர். இதையடுத்து திருமங்கலம் ஊரக துணைகாவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்து சுங்குராம்பட்டியிலிருந்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் வரை செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்தனர். இதையடுத்து சிறைபிடித்த பேருந்துகளை கிராம மக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.