தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் மதுரையில் செப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை ரேஸ்கோர்ஸ் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் நடைபெறும் இப் போட்டிகள் இளையோர் (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை), மூத்தோர் (6 முதல் 12-ஆம் வகுப்பு வரை) என இரு பிரிவுகளாக இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வயதுச் சான்றிதழுடன், (www.sdat.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இளையோர், மூத்தோர் பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரு பிரிவுகளிலும் தலா 3 மாணவர்கள் மற்றும் தலா 3 மாணவியர் வீதம் மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்படுவர்.
மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.